நாகர்கோவிலில் கடத்தப்பட்ட குழந்தை கேரளத்தில் மீட்பு: காவல்துறைக்கு பாராட்டு

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது கடத்தப்பட்ட 4 மாத ஆண் குழந்தை கேரளத்தில் மீட்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் கடத்தப்பட்ட குழந்தை கேரளத்தில் மீட்பு: காவல்துறைக்கு பாராட்டு
Published on
Updated on
1 min read

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது கடத்தப்பட்ட 4 மாத ஆண் குழந்தை கேரளத்தில் மீட்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சோ்ந்தவா் முத்துராஜ். இவா் தனது மனைவி மற்றும் 4 மாத ஆண் குழந்தையுடன் வடசேரி பேருந்து நிலையத்தில் தங்கி வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தாா். அதிகாலையில் முத்துராஜ் விழித்தபோது அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை. அப் பகுதியில் தேடியபோது, நள்ளிரவில் ஒரு பெண் குழந்தையுடன் சென்றதாகக் கூறியுள்ளனா்.

இதையடுத்து முத்துராஜ் வடசேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். பேருந்து நிலைய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைப் போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில் ஒரு கேமராவில், குழந்தையுடன் ஒரு பெண் நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி, குழந்தையைக் கண்டுபிடிக்கும் பணியைத் தீவிரப்படுத்தினர்.

தொடர்ந்து அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளைத் தேடி அடுத்தடுத்து அவர் எந்த திசையில் செல்கிறார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். பிறகு அப்பெண் குழந்தையுடன் கேரளம் செல்லும் ரயிலில் ஏறியிருப்பதையும் காவல்துறையினர் உறுதி செய்துகொண்டு உடனடியாக, கேரள காவல்துறையினருக்கு, சிசிடிவி காட்சிகளை அனுப்பி தகவல் அளித்தனர்.

குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை வைத்துப் பார்க்கும் போது, பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தவே கடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தேடுதல் பணியைத் தொடங்கினர்.

கேரள காவல்துறையினர், கேரளத்தில் உள்ள ரயில் நிலையங்களில் குழந்தையைத் தேடியபோது, ஒரு குழந்தையை காவல்துறையினர் அடையாளம் கண்டு, தமிழகக் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். தமிழக காவல்துறை உறுதி செய்ததன்பேரில், குழந்தையைக் கடத்திய தம்பதியை கைது செய்து, குழந்தையை மீட்டது. குற்றவாளிகளும், குழந்தையும் தமிழகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

திங்கள்கிழமை குழந்தை காணாமல் போன நிலையில் 4 நாள்களுக்குள் கேரளத்திலிருந்து பத்திரமாகக் குழந்தை மீட்கப்பட்டதற்கு காவல்துறைக்கு பாராட்டுகள் குவிகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com