முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு தமிழக மின்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கடந்த வாரம் பாஜக நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து அமித் ஷா வெளியே வரும்போது மின் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இதனைத் தொடர்ந்து, மின் துண்டிப்புக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய உள்துறை செயலகமும் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய நிர்வாக இயக்குநருக்கு மின்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதையும் படிக்க | மாநிலங்களுக்கு அரிசி விற்பனை இல்லை!
அதில், “முக்கிய பிரமுகர்கள் வருகை, பிரதான அரசு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை ஆய்வுசெய்து தடையில்லா மின்சாரம் வழங்குவதுடன், மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.