கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க திங்கள்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் புகழ் பெற்றது, கம்பம் அருகே உள்ள சுருளி அருவி . இங்கு ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருப்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கும்.
மேலும், இங்கு கைலாயநாதர் குகை கோயில், சுருளியாண்டவர் தீர்த்தக்கோயில், பூதநாராயணசாமி கோயில் போன்றவைகள் இருப்பதால் முன்னோர் தர்ப்பணத்திற்கு சிறப்பான ஒன்றாக இருப்பதால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருகையும் அதிகம் இருக்கும்.
தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து நீராடி சென்றனர். மழை பெய்யாததால் அருவிக்கு ஏப். 22 முதல் தண்ணீர் வரத்து நின்றது. ஏப். 26 இல் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. ஆனால், அருவி வளாகத்திற்குள் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அதனால் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது.
தற்போது, யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்த ஸ்ரீ ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தினா் திங்கள்கிழமை முதல் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்தனா்.
அதே நேரத்தில் விலங்குகள் நடமாட்டம் உள்ளதா என கிழக்கு வனச்சரகர் வி.பிச்சைமணி தலைமையில் வன ஊழியர்கள் கண்காணிப்பு செய்து வருகின்றனர்.