சென்னை: ரூ.50 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள வணிக வரி , வட்டி, அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள வணிகர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்க சமாதான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து தமிழக பேரவையில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள வணிகர்கள், மற்றும் நிறுவனங்களுக்கும் வணிக வரித்துறைக்கும் இடையே உள்ள வரி நிலுவை மற்றும் வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வரவும், சிறு வணிகர்களின் நலனைக் காத்திடவும் தமிழக அரசு கொண்டு வரவிருக்கும் வரித் தொகையை வசூலிப்பதற்கான சமாதான திட்டத்தை இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.
வணிகர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்க சமாதான திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.25,000 கோடி அளவுக்கு வணிக வரி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்தான், நிலுவைத் தொகை செலுத்துவதில் சலுகை வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைத்தனர். இதனடிப்படையில் சமாதானத் திட்டம் கொண்டுவரப்பட்டுளள்து.
இந்த திட்டத்தின்படி, வரிமதிப்பீட்டு ஆண்டில், ரூ.50 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள வணிக வரி, வட்டி, அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் 95,000 வணிகர்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
இதையும் படிக்க.. சென்னையில் 21 சிறு கால்வாய்களைப் புனரமைக்கத் திட்டம்!
ஒவ்வொரு வரி மதிப்பீட்டு ஆண்டிலும், வரி, வட்டி, அபராதத் தொகை என வணிக வரி ரூ.50,000க்கு உள்பட்டு இருந்தால், வணிக வரி முற்றிலும் விலக்கு அளிக்கப்படும். தமிழகத்தின் வரலாற்றில், சிறு வணிகர்களுக்கு இவ்வாறு முழு வணிக வரி தள்ளுபடி செய்யப்படுவது இதுதான் முதன்முறை என்றும் ஸ்டாலின் கூறினார்.
மேலும், ஏராளமான வணிக வரி நிலுவை வழக்குகள் அதிகம் இருப்பது வணிக வரித்துறைக்கு அதிக சுமையை ஏற்படுத்துவதுடன் வணிகர்கள், வணிக வரித்துறை இடையேயான பிரச்னையும் அதிகரிக்கின்றன. இதனால், தமிழக அரசுக்கு வருவாயும் இழப்பும் ஏற்படுகிறது.
இந்த திட்டம் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இது அடுத்த 5 மாதங்களுக்கு அதாவது 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரை சமாதான திட்டம் நடைமுறையில் இருக்கும். நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு கண வலியுறுத்தப்படுகிறது என்றும் முதல்வர் கூறியிருந்தார்.