நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளதாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவ்தாஸ் மீனா,
''காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. ஒரே நாளில் 95 செ.மீ. மழை பெய்துள்ளது. வரலாறு காணாத மழையால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உணவு விநியோகம் செய்ய சூலூர் விமானப்படை தளத்திலிருந்து விமான உதவி கோரப்பட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் மூலம் பால், பிரட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வீடுவீடாகச் சென்று வழங்கப்படுகிறது.
நெல்லையில் தண்ணீர் விரைந்து வடிந்துவிடும். தூத்துக்குடியில் தண்ணீர் வடிய தாமதமாகலாம்'' எனக் குறிப்பிட்டார்.