பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி. கஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல இயக்குநரும், நடிகரும், தனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர் டி.பி. கஜேந்திரன் மறைவுற்ற செய்தி மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
இதையும் படிக்க | இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானார்!
எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன்.
தற்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது.
டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.