
அமரன் படத்தில் தன்னுடைய செல்போன் எண் பயன்படுத்தப்பட்டுள்ளதால், ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்லூரி மாணவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு முடியும் வரை அமரன் படத்தை ஓடிடியில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
போரூர் தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வரும் சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த வாசீகன் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இழப்பீடு கோரி வழக்கு
மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படத்தில் எனது கைப்பேசி எண், நடிகை சாய்பல்லவியின் எண்ணாக இருக்கும் காட்சி இடம்பெற்றது. இதனால் அக்.31 முதல் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான அழைப்புகள் எனக்கு வந்து கொண்டே இருக்கிறது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின் அந்த குறிப்பிட்ட காட்சியை நிறுத்தி விடுவதாக தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் அந்த காட்சிகள் நீக்கப்படாததால், தொடர்ந்து அழைப்புகள் வருகிறது.
எனது எண்ணை அனைத்து ஆவணங்களுக்கும் இணைத்துள்ளதால் அதனை மாற்ற முடியாது. சினிமாவில் வரும் காட்சிகளால், தனிமனிதர்களின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்பதை, அனுமதி வழங்குவதற்கு முன் தணிக்கைத்துறை உறுதி செய்ய வேண்டும்.
அதனால் தீர்ப்பு வரும் வரை அமரன் திரைப்படத்தை திரையிலும், ஓடிடி தளத்திலும் வெளியிட தடை விதிக்க வேண்டும்.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தெரிந்தே கைப்பேசி எண்ணை பயன்படுத்தி, எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.