சென்னை: சென்னையில் வழக்கம்போல் அரசுப் பேருந்துகள் இயங்குவதால் மக்கள் சிரமமின்றி பயணித்து வருகின்றனர்.
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிற்சங்க ஓட்டுநர்களை வைத்து முழு அளவிலான பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
அதன்படி, சென்னையில் காலை 7 மணி நிலவரப்படி 32 பணிமனைகளில் இருந்து 2,700-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்பட்டு வருகின்றது.
கோயம்பேடு, கிளாம்பாக்கம், தாம்பரம், பிராட்வே, சென்ட்ரல் ரயில் நிலையம், கிண்டி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கோயம்பேடு, கிண்டி, கிளாம்பாக்கம், தாம்பரம், சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும், பணிமனைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.