
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) கோலாகலமாக நடைபெற்றது.
குடமுழுக்கையொட்டி கடந்த ஜூலை 1ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாட்கள் காலை, மாலை வேளைகளில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
ஏழாம் நாளான திங்கட்கிழமை திருக்கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு பன்னிரெண்டாம் கால யாகசாலை பூஜைகளாகி காலை 6.22 மணிக்கு திருக்கோயில் ராஜகோபுரம், மூலவர் மற்றும் வள்ளி.
தெய்வானை, சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் விமான திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. அப்போது ஓதுவார்கள் தமிழில் வேதங்கள் ஓதினர்.
குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ விதுசேகர சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தமிழக ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் பழனி, ஜெயராமன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடமுழுக்கையொட்டி, அதிகாலைமுதலே லட்சக்கணக்கான பக்தா்கள் கோயில், கடற்கரையில் குவிந்திருந்தனா். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.
பக்தர்கள் மீது ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.