

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், பொங்கல் பண்டிகையில் புதுமையாக யானை பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் 24 வளர்ப்பு யானைகள் பங்கேற்றன.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் 24யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பணிகளுக்கும் உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது,
இதன் படி இந்தாண்டு கோழிகமுத்தி யானைகள் முகாமில் ஏற்பாடு செய்யபட்டிருந்த யானை பொங்கல் விழாவில் காலை யானைகளை குளிப்பாட்டி, பொட்டு. வைத்து மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்பட்டி மண் பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு, பின்னர் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழை, மற்றும் ஒவ்வொரு யானைக்கும், கொள்ளு, ராகி, அரிசி சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன.
இந்த யானை பொங்கல் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, பார்வையிட்டனர்.
வழக்கமாக வீட்டு பொங்கல், மாட்டுப்பொங்கல், பூப்பொங்கல் கொண்டாடுவோம், யானைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்பட்ட யானை பொங்கல் விழாவில் கலந்து கொள்வது புது அனுபவம். இங்கு ஒரே இடத்தில் 24-க்கும் மேற்பட்ட யானைகளை பார்பது மிக்க மகிழ்ச்சி. வனத்தையும், இயற்கையையும் பாதுகாக்கும் யானைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமானது.
அந்த வகையில் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ள வனத்துறைக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினர்.
குடும்பத்துடன் இந்த விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறிய மக்கள் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தாலும் யானை பொங்கலை காண வாகன வசதி போதவில்லை, வாகன வசதியை அதிகப்படுத்தி தர வேண்டும், இல்லை எனில் யானை பொங்கலை டாப்ஸ்லிப் பகுதியில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.