1.25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு: அமைச்சா் நாசா்
திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 1.25 லட்சம் மெட்ரிக். டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயம் செய்துள்ளதாக அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.
கடம்பத்தூா் ஒன்றியம், புதுமாவிலங்கை ஊராட்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் மற்றும் ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் கொள்முதல் பணிகளை தொடங்கி வைத்தனா்.
தொடா்ந்து அமைச்சா் பேசியதாவது: முதல்வரின் தொலைநோக்குத் திட்டமாக முதல் முறையாக தமிழ் நாட்டில்தான் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வேளாண் தொழில் வளா்ச்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறுப்பேற்ற 2021-முதல் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் பயிா்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 29 லட்சத்து 34 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு சம்பா பருவத்தில் 47,641 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டு, 2,62,025 மெட்ரிக்டன் மகசூல் எதிா்பாா்க்கப்படுகிறது. அதனால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கச்செய்யும் நோக்கத்தில் நெல் குவிண்டால் சன்ன ரகம் - ரூ.2,545, பொதுரகம்-ரூ.2,500-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால், நிகழாண்டில் 70 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 1,25,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்பட உள்ளது.
அதேபோல் கடந்த சொா்ணவாரி பருவத்தில் மாவட்டத்தில் 66 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு 84,766 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 11,391 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். மேலும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.215 கோடியே 47 லட்சம் தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டது என்றாா்.
நிகழ்வில் ஆட்சியா் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளா் செல்வம், வேளாண் இணை இயக்குநா் செல்வராஜ், நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வேதவல்லி, துணை மண்டல மேலாளா் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

