
நிஃப்டி 23,450-க்கு கீழ் சரிவு: 3 மாதக் குறைந்தபட்சத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 813 புள்ளிகள் வீழ்ச்சி!!
சென்செக்ஸ் 813.35 புள்ளிகள் சரிந்து 74,764.23 புள்ளிகளாகவும், நிஃப்டி 203.60 புள்ளிகள் சரிந்து 23,431.50 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோப்புப் படம் - பங்குச் சந்தை.
மும்பை: அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் அதிகரிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை தொடர் உயர்வு ஆகியவற்றால், இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கி, வர்த்தக நேரம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள்ளேயே வர்த்தகமானது. பிற்பகலில், பங்குச் சந்தை மீட்கும் முயற்சியை முதலீட்டாளர்கள் மேற்கொண்டாலும், பங்குச் சந்தை வீழ்ச்சியை நோக்கியே பயணித்து, இறுதியில் முக்கிய குறியீடுகள் இன்றைய தினத்தின் குறைந்தபட்ச அளவிலேயே வர்த்தகத்தை நிறைவு செய்தன.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 813.35 புள்ளிகள் சரிந்து, இன்றைய குறைந்தபட்ச அளவான 74,764.23 புள்ளிகளாகவும், நிஃப்டி 203.60 புள்ளிகள் சரிந்து, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவான 23,431.50 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் எச்சிஎல் டெக் அதிகபட்சமாக 4.55 சதவீதம் சந்தித்தது. மேலும், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் மறுபுறம் அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ட்ரெண்ட் மற்றும் என்டிபிசி ஆகிய பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி-யில் இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, எச்.டி.எஃப்.சி லைஃப் மற்றும் விப்ரோ உள்ளிட்ட பங்குகள் சரிந்தன. மறுபுறம், அதானி எண்டர்பிரைசஸ், மேக்ஸ் ஹெல்த்கேர், அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5 சதவீதம் சரிந்தன.
துறைவாரியாகப் பார்த்தால், உலோகம் மற்றும் எரிசக்தி குறியீடுகள் 1.8% மற்றும் 0.6% உயர்ந்தன. நிஃப்டி ஐடி குறியீடு 3% க்கும் மேல் சரிந்து மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதே சமயம், ரியாலிட்டி 2 சதவீதமும், ஊடகம், எஃப்.எம்.சி.ஜி மற்றும் தனியார் வங்கி குறியீடுகள் தலா கிட்டத்தட்ட 1% சரிந்தன.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று 123.19 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர்.
டிவிஎஸ் ஹோல்டிங்ஸ், சோலார் இண்டஸ்ட்ரீஸ், பிரமல் பார்மா, டிவிஸ் லேப்ஸ் உள்ளிட்ட 180 க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 52 வார உச்சத்தை எட்டியது. மறுபுறம், வோல்டாஸ், யுனைடெட் ப்ரூவரீஸ், ஐசிஐசிஐ லோம்பார்ட், இண்டியாமார்ட் இன்டர்மெஷ், ஜேகே லக்ஷ்மி சிமெண்ட், ஐஆர்சிடிசி, செல்லோ வேர்ல்ட், டாபர் இந்தியா, பி&ஜி ஹைஜீன், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வாரக் குறைந்தபட்ச விலையை எட்டியது.
ஆசியச் சந்தையை பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உயர்வுடன் முடிவடைந்தன. அதே வேளையில் ஜப்பானின் நிக்கி 225 மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு சரிவுடன் நிறைவடைந்தன.
ஐரோப்பியச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமானது. அமெரிக்கச் சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.
சர்வதேச பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.67 சதவீதம் உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 100.5 அமெரிக்க டாலராக அதிகரித்தது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது.
Summary
Amid escalating US-Iran tensions and rising crude oil prices, markets opened lower.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






