"நட்புக்காக' எனும் திரைப்படத்தில், நடிகர்கள் சரத்குமார், விஜயகுமார் இருவரும் கார் வாங்குவதற்காக, சாக்கு மூட்டையில் பணத்தை ஷோரூமுக்கு கொண்டு செல்வார்கள். காரை பற்றி இவர்கள் ஷோரூமில் கேட்க, ஷோரூம் ஊழியர்கள் சிரிப்பார்கள். பல ஆண்டுகளுக்கு முன் வந்த இந்தப் படத்தில் வரும் காட்சி இப்போதும் சிரிப்பை வரவழைக்கும்.
இதேபோன்று, அண்மையிலிருந்த சேலத்தில் ஓர் பைக் ஷோரூமுக்கு சென்ற இளைஞர் ஒருவர் சாக்கு மூட்டையில் பணத்தைக் கொட்டி அசர வைத்துவிட்டார்.
அத்தனையும் ஒரு ரூபாய் நாணயங்கள் ரூ.2.65 லட்சத்துக்கு சேகரித்து பைக் வாங்க சென்ற அந்த இளைஞர் பூபதி (29) செய்த செயல் சேலத்தையே அசர வைத்துவிட்டது.
பி.பி.ஏ. முடித்துவிட்டு, கணினி இயக்குபவராகப் பணிபுரிந்துவரும் பூபதிக்கு பஜாஜ் நிறுவனத்தின் இரு சக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்ற ஆசை. இதற்காக 3 ஆண்டுகளுக்கு முன் அதன் விலையைக் கேட்டார் ரூ.2 லட்சம் என்றார்கள்
(இப்போது அதன் விலை ரூ.2.60 லட்சம்).
பைக் வாங்க வேண்டும் என்ற ஆசையில் சேமிப்புப் பணத்தை புதுமையான முறையில் சேகரிக்கத் தொடங்கினார். கிடைத்த ரூபாய் நோட்டுகளையெல்லாம் ஒரு ரூபாய் நாணயங்களாக மாற்றினார். கோயில்கள், தேநீர் கடைகள், ஓட்டல்கள் என்று பல இடங்களில் சேகரித்தார்.
இதன்பின்னர், இரு சக்கர வாகனம் வாங்க பூபதியும், அவரது நண்பர்களும் சாக்கு மூட்டைகளில் கட்டிக் கொண்டு சரக்கு லாரியில் கொண்டு சென்று கடையின் முன் நிறுத்தினர்.
பூபதியின் செயலை கண்ட ஷோரூம் உரிமையாளர் மஹாவிக்ராந்த் திகைத்துவிட்டார். நாணயங்களை எண்ண 10 மணி நேரம் ஆனது.
இதையடுத்து, பூபதிக்கு 400 சிசி எனும் பஜாஜ் மோட்டார்ஸின் இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
ஒரு லட்சம் ரூபாய் நாணயங்களை எண்ண ரூ.140 கமிஷனாக வங்கியில் வாங்குவார்கள். இந்தப் பணத்தை ஷோரூம் உரிமையாளரே கட்டிவிட்டார்.