தில்லியைச் சேர்ந்தவர் உஷா குப்தா (87). கரோனா இரண்டாவது அலை இவருடைய வாழ்க்கையிலும் விளையாடிச் சென்றுவிட்டது.
தில்லியில் உள்ள பாத்ரா மருத்துவமனையில் 27 நாள்கள் கரோனாவுடன் போராடி உயிரைவிட்டார் உஷாவின் கணவர் ராஜ்குமார். ஆரம்பத்தில் கணவன் மனைவி இருவருக்கும் ஒரே நேரத்தில் கரோனா தொற்று ஏற்பட ஒன்றாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது, இரண்டு முறை ஆக்ஸிஜன் செயலிழப்பு ஏற்பட்டது, துரதிருஷ்டவசமாக இரண்டாவது செயலிழப்பின் போது அவரது கணவரின் உடல்நிலை மோசமடைய உயிரைவிட நேர்ந்தது.
"என் கணவரை இழந்த பிறகு மிகப்பெரிய வலியை உணர்ந்தேன்' என்று சொல்லும் உஷா அந்தத் தருணத்தில் கரோனாவில் குறிப்பாக நிதிநிலை சரியில்லாத குடும்பங்களை எவ்வளவு மோசமாக பாதிக்கிறது என்பதை மருத்துவமனையில் கண்கூடாக பார்க்க முடிந்தது. இதையடுத்து மற்றவர்களுக்கு உதவும் முயற்சியில் என்னை ஈடுபடுத்தத் தொடங்கினேன். அதற்கு காரணமாக இருந்தவர் என்னுடைய பேத்தி ராதிகா. குழந்தைகள் நல மருத்துவராக இருந்து வருகிறார். கரோனாவில் இருந்து மீண்டு வந்த என்னை கொவைட் -19 நிவாரணப் பணிக்காக ஏதாவது செய்யும்படி சொன்னார். அதற்கான திட்டத்தையும் அவரே வகுத்து கொடுத்தார்.
ஜூலை 2021 முதல் ஊறுகாய் மற்றும் சட்னிகளின் வியாபாரம் செய்யத் தொடங்கினேன். அப்படித்தான் "ஊறுகாய் மீதான காதல் தொடங்கியது. அதனை ஆங்கிலத்தில் "ஊறுகாய் வித் லவ்' என்று பெயரிட்டாள் பேத்தி.
சில தெரிந்த நபர்கள் மூலம் பாட்டில்களை எங்கு பெறுவது, லேபிள்களை அச்சடிப்பது என தேவையான எல்லாவற்றையும் பற்றிய தகவல்களை சேகரித்து தந்தாள் ராதிகா.
யோசனை தொடங்கிய இரண்டு நாள்களில் "ஊறுகாய் வித் லவ்' பெயர், அதற்கான சின்னம் கிடைக்க வேலைகள் தொடங்கின. ஆரம்ப ஆர்டர்கள் நண்பர்களிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் வந்தன. தொடக்கத்திலேயே 180 பாட்டில்கள் ஊறுகாய் மற்றும் சட்னிகள் விற்றுக் தீர்ந்தன.
இப்படி கிடைக்கும் தொகையை கரோனா சிகிச்சை எடுக்கக் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு பேத்தி ராதிகா வழிகாட்டுதலுடன் கொடுத்து உதவி வருகிறேன்'' என்கிறார் உஷா.
தன்னுடைய கணவனையும் இழந்து, தள்ளாத வயதிலும் உதவி செய்து வரும் மூதாட்டி உஷாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.