முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உயிரிழப்பது தடுப்பூசி செலுத்தாதவர்களை விட 16 மடங்கு குறைவு என்பது ஆஸ்திரேலிய அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்தாத 1,00,000 பேரில் 16 பேர், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திய 1 லட்சம் பேரில் ஒருவருக்கும் குறைவானவரே கரோனாவால் உயிரிந்துள்ளார் என்பது நியூ செளத் வேல்ஸ் சுகாதாரத்துறை சேகரித்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
காலபோக்கில் தடுப்பூசி வெளிப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலில் கரோனா ஏற்பட வாய்ப்புள்ளபோதிலும், தீவிரமான கரோனா மற்றும் அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்பிலிருந்து தடுப்பூசி பாதுகாப்பு தருவது இந்த ஆய்வின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் கரோனாவால் உயிரிழக்கும் வாய்ப்பு தடுப்பூசி செலுத்தாதவர்களை விட 20 மடங்கு குறைவு என்பது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பல்வேறு நாடுகள் கரோனாவை எண்டெமிக் நோயாக எதிர்கொள்வதற்கான வாய்ப்பை இந்த ஆய்வுகள் அதிகப்படுத்தும். இதன் காரணமாக, தடுப்பூசி செலுத்திவயர்களுக்கு லேசான உடல்நலக்குறைவு ஏற்படலாம். அதுமட்டுமின்றி, மக்கள் பெரிய எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசியை எடுத்து கொள்வதன் மூலம் சுகாதார கட்டமைப்பின் மீது கரோனா ஏற்படுத்திய நெருக்கடி குறைக்கப்படும்.
இதையும் படிக்க | ‘கோவேக்ஸின் செலுத்தியவா்களுக்கு பிரிட்டனில் கட்டுப்பாடுகள் கிடையாது’
மக்கள் மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையில் கூடுவது தவிர்க்கப்படும். தீவிர சிகிச்சை பிரிவின் தேவை குறையும். இவை, அனைத்தும், கரோனா பெருந்தொற்று பரவ தொடங்கிய காலத்தில் உலக நாடுகள் சந்தித்த மிகப் பெரிய சவால்களாகும்.