பாகிஸ்தானில் மேலும் 2 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் அதிகரித்துவரும் குரங்கு அம்மை நோய் பாதிப்பால், உலகளாவிய சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை அறிவித்தது. இந்த வைரஸ் சர்வதேச எல்லைகள் மூலம் பல நாடுகளில் பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. ஐநா சபையின் உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் குரங்கு அம்மை நோய் பாதிப்பைப் பொது சுகாதார அவசர நிலையாக செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தது. ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு குரங்கு அம்மை நோயால் 14,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 524 பேர் பலியானதாகவும், இந்த பாதிப்பு கடந்த வருடம் வெளியான புள்ளி விவரத்தைவிட, அதிகம் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் மேலும் 2 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக சௌதி அரேபியாவில் இருந்து அண்மையில் பாகிஸ்தான் திரும்பிய 34 இளைஞருக்கு குரங்கு அம்மை நோய் அந்நாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு பேருக்கு தற்போது குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2023 முதல், பாகிஸ்தானில் 11 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒருவர் இந்நோய்க்கு பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.