லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கேரள நர்ஸுக்கு மரண தண்டனை! யேமன் அதிபர் உறுதி!

யேமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது பற்றி...

News image

நிமிஷா பிரியா - கோப்புப்படம்

Updated On :31 டிசம்பர் 2024, 5:38 am

யேமன் குடிமகனை கொலை செய்த வழக்கில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு தொகையை ஏற்க மறுத்து வரும் நிலையில், ஒரு மாதத்துக்குள் தண்டனை நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, 2008 ஆம் ஆண்டு யேமனுக்குச் சென்றார். அங்கு பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், யேமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியுடன் இணைந்து சொந்தமான கிளினிக் ஒன்றை திறந்தார்.

கிளினிக் நிதியை மஹ்தி தவறான பயன்படுத்தியதால், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிமிஷாவின் பாஸ்போர்ட்டை கொடுக்காமல் மஹ்தி தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகராறில், மஹ்தியை கொலை செய்த நிமிஷா யேமனைவிட்டு தப்ப முயற்சித்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் 2018 ஆம் ஆண்டில் குற்றவாளியாக நிமிஷா அறிவிக்கப்பட்டார். யேமன் தலைநகர் சனா நீதிமன்றத்தால் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டால் மரண தண்டனை ரத்து செய்வதற்கான வாய்ப்பை யேமன் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, யேமனுக்கு சென்றுள்ள நிமிஷா பிரியாவின் தாய் பிரேமா குமாரி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் இழப்பீடு தொகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய தூதரகம் சார்பில் வழக்கறிஞரும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இழப்பீடு தொகையை ஏற்க பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், மரண தண்டனையை நிறைவேற்ற யேமன் அதிபர் ரஷீத் முகமது அல்-அம்மி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், “யேமனில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை நாங்கள் அறிவோம். பிரியாவின் குடும்பத்தினர் தண்டனையை நிறுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.