விதிமீறல்களில் ஈடுபடும் உர விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை: வேளாண்மைத்துறை எச்சரிக்கை
கோவை: கோவை மாவட்டத்தில் விதிமீறல்களில் ஈடுபடும் உர விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் ராபி பருவ சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகின்றனா். தற்போது 1.12 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் தென்னை, சோளம், மக்காச்சோளம், பழம் மற்றும் காய்கறி பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களுக்குத் தேவையான ரசாயன உரங்களான யூரியா 1,456 மெட்ரிக் டன், டிஏபி 2,531 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,897 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3,894 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 1,492 மெட்ரிக் டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்புவைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
வட்டார அளவில் உள்ள அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் வேளாண்மை அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டு தரப் பரிசோதனைக்காக உர மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பி வருகின்றனா். உர மூட்டையில் குறிப்பிட்டுள்ள எம்.ஆா்.பி. விலையைத் தாண்டி உரம் விற்பனை செய்தல், விற்பனை உரிமங்களில் இணைக்கப்படாத உரங்களை இருப்பில் வைத்து விற்பனை செய்தல், இணைப்பொருள்களைக் கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு விற்பனை செய்வது ஆகிய விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-இன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், உர விற்பனை குறித்து அனைத்து உர விற்பனையாளா்களுக்கும் வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு, உரங்களை விற்பனை முனை இயந்திரம் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
