சூலூரில் 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள கோடீஸ்வர கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், சூலூரில் கடந்த வாரம் மார்க்கெட் சாலை பகுதியில் தனியாக இருந்த வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அப்பகுதிகளில் கடந்த காலங்களில் வீடுகளில் நிகழ்ந்த திருட்டு வழக்குகளும் கவனிக்கப்படாமல் இருந்தன. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனி கவனம் செலுத்த கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்த் ஆரோக்கியராஜுக்கு உத்தரவிட்டதைத் தொடந்து சூலூர் காவல் ஆய்வாளர் மாதைய்யன், உதவி ஆய்வாளர்கள் நவநீதகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத் தலைமையில் தனிப்படை அமைத்து வீடு புகுந்து திருடும் கொள்ளையர்களைத் தேடி வந்தனர். சூலூரில் நடந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்திய போலீசார் முத்துக்கவுண்டன் புதூர் பகுதியில் பதுங்கி இருந்த சூலூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மருதாசலம்(36) என்பவரைக் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் கணபதி கோவில் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் நட்டூரான் என்ற நடராஜன்(49) மற்றும் சிவானந்தாகாலனியைச் சேர்ந்த மோகன் என்பவரது மகன் சதீஷ்குமார்(37) ஆகியோரை கூட்டணி அமைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இந்நிலையில் சூலூர் பெரிய குளம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில்வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் சூலூரில் நடந்த குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நட்டூரான் மற்றும் சதீஷ், மருதாசலம் என்பது தெரியவந்தது. 3 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தயதில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் தெரிய வந்தது. இதில் முக்கிய குற்றவாளியான நட்டூரான் என்கிற நடராஜன் மீது கோவையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் திருட்டு வழக்கு உள்ளக. 14 வயதில் திருட்டு தொழிலைத் தொடங்கிய நட்டூரான் தற்போது 51 வயதில் 80 திருட்டு வழக்குகளுடன் மீண்டும் திருடி வருவது விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிக்க- ஹாட்ரிக் எடுத்த இங்கிலாந்து: நியூசிலாந்து திடீர் சரிவு
திருட்டு வழக்கில் சறையில் இருந்தபோது சூலூரைச் சேர்ந்த மருதாசலம் உள்ளிட்டோரின் தொடர்பு ஏற்பட்டு தனது திருட்டை சூலூர் பகுதிகளலும் அரங்கேற்றியுள்ளனர். கொள்ளையன் நட்டூரான் தற்போது பெரிய கோடீஸ்வர்ராக இருந்தும் திருட்டுத் தொழிலைத் தொடர்ந்து வருகிறார். திருடி சேகரித்த பணத்தில் பல்வேறு பகுதிகளில் வீ்டுமனைகள் வாங்கி முதலீடு செய்துள்ளார். சூலூர், காங்கேயம்பாளைம், மார்க்கெட்ரோடு, சூலூர் நீதிமன்றம் முன் நடந்த நகை பறிப்பு மற்றும் பல்லடம், செட்டிபாளையம், அன்னூர் காவல் நிலையங்களில் திருடிய 35 பவுன் நகைகள் மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சூலூரில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வரக் கொள்ளையன் நட்டூரானைப் பார்க்க பிடிபட்ட சிறிது நேரத்திலேயே பல்வேறு வழக்கறிஞர்கள் வந்து விட்டனர். மேலும் பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து உதவி ஆய்வாளர்கள், தனிப்படைக் காவலர்கள் என தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
காவல் நிலையத்திற்கு வரும் கூட்டத்தை விட நட்டூரானை பார்க்க வந்த விஐபிக்கள் அதிகம் என்றே சொல்லும் அளவிற்கு ஆட்கள் தேடி வந்தது ஆச்சரியமளித்தது. நட்டூரான் மீது காஞ்சீபுரம், ஈரோடு, சத்தியமங்கலம், திருப்பூர், ஆந்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 80 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக தெரிய வருகிறது.