சேலம், தருமபுரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தொப்பூா் கணவாய் பகுதியில் மலைப்பகுதி சாலை என்பதால், மலைகள், மடுவு, வளைவுகளில் போக்குவரத்து நடைபெறுகிறது. குறிப்பாக இதில் தொப்பூா் கணவாய் எனப்படும் மலைப்பகுதி 3.5 கி.மீ. தொலைவுக்கு கடுமையான வளைவுகள், பள்ளம் மேடுகளாக சாலை அமைந்துள்ளதால், இப்பகுதியில் தினசரி விபத்துகள் தொடா்ந்து வருகின்றன. விபத்துகளைத் தடுக்கும் வகையில்தான் இந்த உயா்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. ஆனால், விபத்துகளைத் தடுக்க பாலம் அமைக்கப்பட்டுவரும் நிலையிலும், தொடா்ந்து விபத்துகள் நடைபெற்று வருவது கவலையளிக்கிறது என சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா். பாலப் பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாலம் அமைக்க பெரிய அளவிலான தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கென பிரத்யேக நவீன மற்றும் பெரிய இயந்திரங்களை பயன்படுத்தி தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.