டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாகி இருந்த கடைகள் மற்றும் வீடுகளுக்கு மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் ரூ. 32 ஆயிரம் அபராதம் விதித்தார்.
மதுரை சிம்மக்கல் வடக்கு 3 மற்றும் 4-ஆவது குறுக்குத் தெரு, தைக்கால் தெரு, திருமலைராயர் படித்துறை ஆகிய பகுதிகளில் வீடுகளில் சேமித்து வைத்துள்ள குடிநீரில் டெங்கு கொசு இருக்கிறதா என ஆணையர் அனீஷ் சேகர் புதன்கிழமை ஆய்வு செய்தார். வீடுகளில் இருக்கும் தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்த அறிவுறுத்தினார். மாநகராட்சியிலிருந்து விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் குளோரின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தார்.
பின்னர் பைக்காரா முத்துராமலிங்கபுரத்தில் வீடு வீடாக ஆய்வு செய்தபோது, கழிவுநீரை நேரடியாக வாய்க்காலில் வெளியேற்றிய வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்க அறிவுறுத்தினார்.
செல்லூர் 60 அடி சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் ஆய்வு செய்தபோது, வாளியில் இருந்த தண்ணீரில் டெங்கு கொசு இருப்பது கண்டறியப்பட்டு அக்கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு வீட்டிலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தி கண்டறியப்பட்டதால் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்ப்டடது.
அதைத் தொடர்ந்து அப்பகுதியில் பழைய பொருள்கள் கிட்டங்கியில் ஆய்வு செய்தபோது, அங்கு சேமித்து வைத்திருந்த தண்ணீரில் டெங்கு கொசுக்கள் இருந்ததால் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வின்போது மாநகராட்சி உதவி ஆணையர்கள் கெளசலாம்பிகை, பழனிசாமி, உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன், பொறியியல் மற்றும் சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.