தேவகோட்டையில் மாட்டு வண்டி பந்தயம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்கோட்டை கிராமத்தில் குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, மாட்டுவண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து மொத்தம் 215 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதில் பெரிய மாடு பிரிவில் 28 வண்டிகள், நடு மாடு பிரிவில் 75 வண்டிகள், சிறிய மாடு பிரிவில் 110 வண்டிகள் என ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வழியாக 3 சுற்றுகளாக பந்தயம் நடத்தப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற முதல் 7 மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசு, நினைவுக் கோப்பை, கிடாய், சேவல், கோழி, பருத்தி மூட்டை, குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. சாரதிகளுக்கும் தனியாக ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நின்று பந்தயத்தை ஆா்வத்துடன் கண்டு களித்தனா்.
