கம்பம்: சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் செவ்வாய்க்கிழமை பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க புலிகள் காப்பகத்தினர் தடை விதித்தனர்.
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சுருளி அருவி, கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அருவியில் திங்கள்கிழமை மாலை மற்றும் செவ்வாய்க்கிழமை காலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதைக் கண்காணித்த புலிகள் காப்பக ஊழியர்கள் அருவியில் குளிக்க பக்தர்கள், சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. இதனால் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுபற்றி ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலய ஊழியர் ஒருவர் கூறியது,
அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் பக்தர்கள் குளிக்க செவ்வாய்க்கிழமை தடை விதிக்கபட்டுள்ளது. அருவியில் ஏற்படும் நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம். தொடர் மழை பெய்தால் தடை நீட்டிக்கப்படும் என்றார்.