புதுச்சேரி துணைநிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வெள்ளிக்கிழமை (அக்.13) குறைகளைக் கேட்கவுள்ளதாக ஆட்சியர் ஆர்.கேசவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : புதுச்சேரி துணைநிலை ஆளுநர், காரைக்கால் மாவட்ட மக்களிடம் குறைகளைக் காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், 13-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். புகார்களை எழுத்துவடிவில் அளிக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.