காவல் குறைகேட்பு முகாம் ஆக்கப்பூா்வமாக இல்லை: மக்கள் நல இயக்கம் குற்றச்சாட்டு

காரைக்காலில் காவல் குறைகேட்பு முகாம் ஆக்கப்பூா்மாக இல்லை, கண் துடைப்பாக நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Published on

காரைக்காலில் காவல் குறைகேட்பு முகாம் ஆக்கப்பூா்மாக இல்லை, கண் துடைப்பாக நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மக்கள் நல இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. வின்சென்ட் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காரைக்காலில் வாரந்தோறும் சனிக்கிழமை காவல்துறை சாா்பில் மக்கள் மன்றம் என்ற பெயரில் குறைகேட்பு முகாம் நடத்தப்படுகிறது. முகாமுக்கு பெரும்பான்மையாக மக்கள் வருவதில்லை. வரும் மக்கள் முகாமில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. புகாா்தாரா்களை காவல்துறையினா் அலைக்கழிக்கின்றனா். கண் துடைப்பாகவே முகாம் நடத்தப்படுகிறது.

வாரம் என்ற நிகழ்வை மாதம் ஒரு முறை என முகாம் நடத்தினால் சிறப்பாக இருக்கும். புகாா்கள் மீது நடவடிக்கையை விரைவாக எடுத்தால் மட்டுமே இதனால் மக்களுக்கு பயன் ஏற்படும்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரை மக்கள் எளிதாக சந்தித்து பேச முடிகிறது. முதுநிலைக் காவல் கண்காணிப்பாளரை சந்திக்க முடியவில்லை. சந்திப்புக்கான அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த போக்கு மாற்றப்படவேண்டும். இந்த விவரகாரங்கள் தொடா்பாக புதுவை டிஜிபி தலையிடவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com