இரு ரயிலில் பெண்கள் தவறவிட்ட நகைப் பைகள் மீட்பு

கோவில்பட்டியில் 5 பவுன் தங்கநகையுடன் ரயிலில் தவறவிட்ட பையை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
Updated on
1 min read

கோவில்பட்டியில் 5 பவுன் தங்கநகையுடன் ரயிலில் தவறவிட்ட பையை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த மிட்டாய் வியாபாரி கோபால்ராஜ் மனைவி கிரிஜா(45). இவர் செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து புறப்பட்ட திருச்செந்தூர் செல்லும் செந்தூர் விரைவு ரயிலில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஏறி கோவில்பட்டிக்கு புதன்கிழமை அதிகாலை வந்து இறங்கினார்.
அப்போது அவர் கையில் வைத்திருந்த பையை முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியிலேயே விட்டுவிட்டு இறங்கி சென்றுவிட்டார்.
அந்தப் பையில் 5  பவுன் தங்கநகை, ரூ.5ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்லிடப்பேசி இருப்பதாகவும், அந்த பையை ரயில் பெட்டியிலேயே விட்டுவிட்டு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கிய தகவலை அவர் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரிடம் தெரிவித்தார்.  இதையடுத்து,  ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் அரியநாயகம் நடவடிக்கை மேற்கொண்டு,  மணியாச்சி ரயில் நிலையத்தை தொடர்பு கொண்டு அங்கிருந்த காவல் துறையினர் மூலம் அந்த ரயில் பெட்டியில் இருந்த பை மீட்கப்பட்டது.
இதையடுத்து, ரயிலில் தவறவிட்ட பையை ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் கிரிஜாவிடம்  ஒப்படைத்தார்.  அப்போது,  ரயில் நிலைய அதிகாரி மகாராஜ்சிங்,  ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் முப்பிடாதி ஆகியோர் உடனிருந்தனர்.
கோவை- நாகர்கோவில் ரயிலில்
நாகர்கோவில், நவ.1:  நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பெண் தவறவிட்ட  நகை பையை போலீஸார் மீட்டனர்.
கோவை கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்(39). லிப்ட் மெக்கானிக். இவரது மனைவியின் சொந்த ஊர் திருநெல்வேலி.  சுபாஷ் தனது குடும்பத்துடன் கோவையில் இருந்து நாகர்கோவில் விரைவு ரயில் மூலம் திருநெல்வேலிக்கு புதன்கிழமை வந்தார்.
அப்போது,  சுபாஷின் மனைவி கைப்பையை ரயிலில் தவறவிட்டு இறங்கியுள்ளார். வீட்டுக்குச் சென்று பார்த்த போதுதான் இந்த விவரம் தெரிய வந்தது. அந்தப் பையில் 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3,500 இருந்தது. இதையடுத்து, சுபாஷ் தகவல் தெரிவித்ததன்பேரில், திருநெல்வேலி ரயில் நிலைய போலீஸார்,  நாகர்கோவில் ரயில் நிலைய போலீஸாரிடம் தொடர்பு கொண்டு விவரம் கூறினர்.
அங்கு,  ரயில்வே போலீஸ் தலைமைக்காவலர் ஷோபா,  ரயிலில் சோதனை நடத்தி சுபாஷின் மனைவி தவறவிட்ட நகை பையை மீட்டு, அவரிடம் ஒப்படைத்தார். நகையை மீட்ட தலைமைக்காவலரை அனைவரும் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com