பேய்க்குளம் பகுதியில் யூரியா, டிஐபி உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் புகாா்
பேய்க்குளம் பகுதியில் யூரியா, டிஐபி உரம் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
சாத்தான்குளம், பேய்ககுளம் பகுதியில் கிணறு, குளத்து பாசனங்கள் மூலம் விவசாயம் நடந்து வருகிறது. தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், ஆசீா்வாதபுரம், அம்பலச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் செயல்படும் உரக்கடைகளில் கடந்த 6 மாதங்களாக யூரியா, டிஐபி உரங்கள் கிடைக்கவில்லை எனவும், வெளி மாா்க்கெட்டில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
எனவே, மாவட்ட ஆட்சியா், வேளாண்மை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து இப்பகுதியில் யூரியா, டிஐபி உரங்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட கடலை விவசாயிகள் சங்கத் தலைவா் வி.எஸ். முருகேசன் வலியுறுத்தியுள்ளாா்.
