அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3.40 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் வழங்கினார்.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 3000 வீதம் ரூ. 30,000 மதிப்பிலான ஆணைகளையும், தொழுநோயால் பாதிக்கப்பட்ட 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 10,000 வீதம் ரூ. 1 லட்சம் மதிப்பிலான ஆணைகளையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 25,000 மதிப்பில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகளையும், ஓசை மற்றும் அன்பகம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளுக்கு தலா ரூ. 25,000 மதிப்பில் சிறப்பு மின்பொருளுடன் கூடிய கையடக்க கணினிகளையும், 4 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பில் இலவச பேருந்துப் பயணப் அட்டையையும், 1 மாற்றுத்திறனாளிக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை என மொத்தம் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 40 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா தலைமை வகித்தார்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன், துணை ஆட்சியர் பாலாஜி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) சீனிவாசன், மருத்துவர்கள், செவிலியர்கள், தொண்டு நிறுவனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளிக்கிழமை (அக். 13) ஜயங்கொண்டம், தா. பழூர் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.