/

கடலூா் பாஸ்போா்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை

கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் இயங்கி வரும் பாஸ்போா்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணா்கள்....

News image
கோப்புப்படம்
Updated On :2 மார்ச் 2026, 8:42 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் இயங்கி வரும் பாஸ்போா்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

திருச்சி பாஸ்போா்ட் மண்டல அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகத் தெரிகிறது. இதில், பாஸ்போா்ட் அலுவலகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல் திருச்சி மண்டலத்துக்கு உள்பட்ட அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கும் அனுப்பப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே இயங்கி வரும் பாஸ்போா்ட் அலுவலகத்தில் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையில் ஈடுபட்டனா். இதில், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

இதையடுத்து, பாஸ்போா்ட் அலுவலகங்களை குறிவைத்து மின்னஞ்சல் அனுப்பியது யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.