புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள கைதிகளால் விவசாயம் செய்யப்பட்டதில் இருந்து கத்திரிக்காய், மாங்காய், எலும்பிச்சை, பப்பாளி, கீரைகள், முள்ளங்கி, பலா, வெண்டை ஆகிய காய்கறிகளோடு மஞ்சள் சாமந்தி பூக்களும் அறுவடை செய்யப்பட்டது.
புதுச்சேரி அருகேயுள்ள காலாப்பட்டு மத்திய சிறையில் 250-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளை மனம் திருத்துவதற்காகவும், அவர்களை நல்வழிப்படுத்தும் வகையிலும் சிறைத்துறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தன்னார்வ நிறுவனங்கள் மூலம் கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தற்போது புதிய முயற்சியாக சிறை வளாகத்தில் இயற்கை விவசாயம், பண்ணைகள் அமைத்து ஆடு, மாடு, கோழி, முயல்கள் வளர்த்தல் போன்ற செயல்களில் கைதிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதையும் படிக்க: 1993 மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய 4 பேர் கைது
சிறையில் உள்ள சுமார் 2½ ஏக்கர் நிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயற்கை விவசாயத்தை தொடங்கினர். அங்குள்ள தண்டனைக் கைதிகள் மூலம் நிலத்தை உழுது, பாத்தி கட்டினர். பின்னர் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள்ளன.
இயற்கை முறையிலான விவசாயம் என்பதால், அதற்குத் தேவையான உரங்களை பெற ஆடு, மாடுகள், முயல் வளர்ப்புப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றை கைதிகளே பராமரித்து வருகின்றனர். கைதிகள் பயிரிட்ட செடிகளில் பூக்கள் பூத்து குலுங்கின. காய்கறிகளும் விளைந்து அறுவடைக்கு தயாரானது. இதனை அறுவடை செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
சிறைத்துறை செயலர் நெடுஞ்செழியன், தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினர் வித்யா ராம்குமார், சிறை அதிகாரி சாமி வெற்றிசெல்வன் ஆகியோர் இந்த அறுவடை பணியை தொடங்கி வைத்தனர். சிறை வளாகத்தில் விளைந்த கத்தரிக்காய், மாங்காய், எலுமிச்சை, பப்பாளி, கீரைகள், முள்ளங்கி, வெண்டை ஆகிய காய்கறிகளும், பழங்களும், மஞ்சள் கிழங்கும், சாமந்தி பூக்களும் அறுவடை செய்யப்பட்டன.
காய்கறிகளை கைதிகளின் உணவு தயாரிப்புக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். விளைச்சல் அதிகரிக்கும் போது பூ மற்றும் காய்கறிகளை விற்பனைக்காக மார்க்கெட்டிற்கு அனுப்பி வைப்பது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.