பெங்களூரு பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு இடையேயான புறநகர் ரயில் சேவையை வெள்ளிக்கிழமை காணொலிக்காட்சி மூலம் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடக்கிவைத்தார்.
பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் அதிக அளவில் தகவல், உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால் பெங்களூரின் மற்ற பகுதிகளிலிருந்து ஒயிட்பீல்டுக்கு மாநகரப் பேருந்தில் ஊழியர்கள் அதிக அளவு செல்கின்றனர். இதனால், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுவதோடு, சாலைகளில் வாகன நெரிசலும் அதிகரித்து வருகிறது.
இதைத் தவிர்க்கும் வகையில், வெள்ளிக்கிழமை காணொலிக்காட்சி மூலம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு, பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு இடையேயான புறநகர் ரயில் சேவையைத் தொடக்கிவைத்தார். பெங்களூரு பைப்பனஹள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனந்த்குமார், மாநில அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன், சட்டப்பேரவை உறுப்பினர் ரகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புறநகர் ரயில் மூலம் பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு இடையில் உள்ள 12 கி.மீ தொலைவை 24 நிமிடங்களில் பயணிக்க முடியும். 8 பெட்டிகள் கொண்ட புறநகர் ரயிலில் ஒரு நடைக்கு 2,412 பேர் பயணிக்க முடியும். 804 இருக்கைகள் கொண்டுள்ள இந்த ரயிலில், அவசரகாலத்திற்கு பயன்படுத்தும் வகையிலான பிரேகிங் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.