மைசூரு மாவட்டத்துக்குள்பட்ட வருணா சட்டப் பேரவைத் தொகுதியில் தனது மகன் யதீந்திரா போட்டியிடுவதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
ஹாசன் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடக்கி வைக்க ஹெலிகாப்டரில் ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடகத்தில் எனது (சித்தராமையா) தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை காங்கிரஸ் சந்திக்க உள்ளது. ஆனால் முதல்வராக யாரை தேர்வு செய்வது என்பதை கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். கூட்டுத் தலைமையில் தேர்தலைச் சந்திப்போம் என கூறுவது சிலரது தனிப்பட்ட கருத்து. வருணா தொகுதியில் யதீந்திரா போட்டியிடுவதை கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். மாநில கட்சியான மஜதவை அழிக்க தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக முயற்சிக்கின்றன என முன்னாள் பிரதமர் தேவெ கெüடா குற்றம் சாட்டியுள்ளது குறித்து கருத்து கூற விரும்பமில்லை. அரசியலில் யாரும் யாரையும் ஒழிக்க முடியாது. தேர்தலில் மக்கள் அதனை தீர்மானிப்பார்கள் என்றார் அவர்.