மாநகரப் பேருந்து எண்ணிக்கையை உயர்த்த திட்டம்
மாநகரப் பேருந்து எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எச்.எம். ரேவண்ணா தெரிவித்தார்.
மாநகரப் பேருந்து எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எச்.எம். ரேவண்ணா தெரிவித்தார்.
பெங்களூரு விதானசெளதாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குறைந்த போக்குவரத்து தினவிழாவை தொடக்கி வைத்து அவர் பேசியது:
கார் உள்ளிட்ட வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பெங்களூரில் மாசு அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே குறைந்த போக்குவரத்து தினத்தன்று இது போன்ற வாகனங்களின் எண்ணிக்கை குறைத்து, மாநகர பேருந்து, மெட்ரோ ரயில்களை போக்குவரத்துக்கு பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். இதனை கருத்தில் கொண்டு வரும் நாள்களில் பெங்களூரில் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
பொதுமக்களை மாநகரப் பேருந்தில் பயணம் செய்ய ஊக்குவிக்கும் வகையில் பாஸ் கட்டணங்களைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளோம். விரைவில் 150 மின்சார மாநகரப் பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக 40 பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். சர்வதேச அளவில் ஒலி, காற்று மாசுவால், தட்பவெட்பங்கள் மாறி வருகின்றன.
எனவே, இதைத் தடுக்க நாம் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அண்மையில் தில்லியில் ஏற்பட்ட பிரச்னையை நாம் அனைவரும் அறிவோம். அதுபோன்ற நிலைமை பெங்களூருவுக்கு வராமல் இருக்க அனைவரும் கைகோப்போம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் மேயர் சம்பத் ராஜ், மண்டல போக்குவரத்து ஆணையர் தயானந்த், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைவர் நாகராஜ் யாதவ், நடிகர் அனூப், நடிகை ரூபிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.