இறைச்சியை சாப்பிட்டுவிட்டு கோயிலுக்குச் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் அதிருப்தியளிப்பதாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து தனது சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது: வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கோழி இறைச்சியை சாப்பிட்டுவிட்டு நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவரது செயல்பாடுகளுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள். தேர்தல் வந்தால் மட்டுமே ராகுல் காந்தி ஹிந்து எனக் கூறிக் கொண்டு கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இதேபோல, முதல்வர் சித்தராமையா மீன் சாப்பிட்டுவிட்டு தர்மஸ்தலா கோயிலுக்குச் சென்று மஞ்சுநாத சுவாமியை தரிசனம் செய்தார். இது ஹிந்து மதத்தினரைப் புண்படுத்தும் செயலாகும். இதுபோன்ற செயல்களில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து ஈடுபடுவது முறையல்ல. இதைத் தவிர்க்க அவர்கள் முயற்சிக்க வேண்டும் என்றார்.