முகப்பு
பெங்களூரு

எடியூரப்பாவின் ஊழல் நினைவுக்கு வரவில்லையா?: அமித்ஷாவுக்கு முதல்வர் சித்தராமையா கேள்வி 

ஊழல் குறித்து பேசும் அமித்ஷாவுக்கு எடியூரப்பாவின் ஊழல் நினைவுக்கு வரவில்லையா? என்று முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பினார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:57 AM
பகிர்:

ஊழல் குறித்து பேசும் அமித்ஷாவுக்கு எடியூரப்பாவின் ஊழல் நினைவுக்கு வரவில்லையா? என்று முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பினார்.
 சாமராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் நகரில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு அவர் பேசியது:
 முந்தைய பாஜக ஆட்சியின் போது ஊழலில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று திரும்பியுள்ள பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவை அருகில் வைத்துக் கொண்டு, எனது தலைமையிலான அரசு மீது பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசியிருக்கிறார்.
 ஊழல் குறித்து பேசும் அமித்ஷாவுக்கு எடியூரப்பாவின் ஊழல் நினைவுக்கு வரவில்லையா? அதேபோல ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட அமைச்சர்கள் சிறைக்குச் சென்று திரும்பியதும் நினைவுக்கு வரவில்லையா? அமித்ஷாவே சிறைக்குச் சென்று திரும்பியவர்தான்.
 அதுமட்டுமல்லாது, அமித்ஷா இரண்டு ஆண்டுகள் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். பெங்களூரு வந்துள்ள அமித்ஷா, அதிகாலை 3 மணிவரை கட்சியினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அமித்ஷா எந்த தந்திரங்களில் ஈடுபட்டாலும், சட்டப்பேரவைத் தேர்தலில் 60 இடங்களுக்கு மேல் பாஜக கைப்பற்றாது என்ற அறிக்கை கிடைத்திருப்பதால், அவர் வேதனை அடைந்துள்ளார்.
 அதனால்தான் எனது அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார். தேசியத் தலைவராக இருக்கக்கூடிய அமித்ஷா தனதுகட்சியினர் கூட்டங்களில் மத்திய அரசின் சாதனைகளைக் கூறி, மக்களை சந்திக்க வேண்டும்.
 மக்களின் ஆதரவை பெற மத்திய அரசின் சாதனைகளைக் கூறாமல், மாநிலத்தில் மதக் கலவரங்களில் ஈடுபடுங்கள், துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தும் வகையில் கலவரங்களை நடத்துங்கள் என்று கட்சியினருக்கு வழிகாட்டுதல் வழங்குகிறார்.
 மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் நிதி குறித்து அமித்ஷா பேசி வருகிறார். மத்திய அரசு மாநில அரசுக்கு கொடுக்கும் பணம் யாருடையது? மாநில அரசுக்கு வழங்க வேண்டிய பங்குத்தொகைதானே. அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதியாகும்.
 எனவே, அந்த நிதியை மாநில அரசுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும். மத்திய அரசு விடுவிக்கும் நிதியை கேட்க அமித்ஷா இங்கு வரவேண்டுமா? இதை கேட்டு மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்களா?
 கர்நாடகத்தில் காங்கிரஸ் ஒழிந்தால்தான் மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று எடியூரப்பா கூறியிருக்கிறார். எடியூரப்பா சிறைக்குச் சென்று வந்தாரே அப்போது கர்நாடகத்தில் எந்தகாலம் இருந்தது என்பதை அமித்ஷாதான் கூற வேண்டும் என்றார்.
 மத நல்ணக்கத்தை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை
 சாமராஜ்நகர், ஜன.10: மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
 இதுகுறித்து சாமராஜ்நகர் மாவட்டம், நாகவள்ளி கிராமத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 சமுதாயத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தை பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சீர்குலைக்க முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வன்முறையில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிஎஃப்ஐ, ஆர்எஸ்எஸ், எஸ்டிபிஐ, பஜ்ரங் தள் போன்ற எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் பாரபட்சம் இல்லை.
 மக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும். இந்த உண்மையை அறியாமல் அமித் ஷா பரப்புரை மேற்கொண்டுள்ளார். மஜத தலைவர்களைச் சந்தித்து, அவர்களை காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை.
 குடகு சென்றிருந்த போது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மஜத மூத்த தலைவர் எம்.சி.நானையாவைச் சந்தித்தேன். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. 1983 முதல் எம்.சி.நானையாவும், நானும் நண்பர்கள். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தன்வீர்சேட்டுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து விசாரணை நடத்துமாறு போலீஸôருக்கு உத்தரவிட்டுள்ளேன். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்க தனக்கு தகுதி இல்லை என்று சிறைக்குச் சென்று வந்த பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா கூறுவது நகைப்பிற்குரியது என்றார்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.