மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மேக்கேதாட்டு அணை திட்டம் குறித்து முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்
பேசியது:
எனது தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசின் தலையாய திட்டங்களில் ஒன்று மேக்கேதாட்டு அணையாகும். இந்தத் திட்டத்தால் தமிழகத்துக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படப் போவதில்லை. ஆனாலும், அரசியல் நோக்கத்திற்காக மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழக அரசு எதிர்த்துள்ளது. கர்நாடகத்தின் எல்லைக்குள்பட்ட பகுதியில் மேக்கேதாட்டு அணையைக் கட்டிக்கொள்வதற்கு எவ்வித தடையும் இல்லை. இதற்கு சாதகமாகவே உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புகள் அமைந்துள்ளன.
மேக்கேதாட்டு அணையைக் கட்ட வேண்டாம் என்று கூறுவதற்கு எந்த உத்தரவும் இல்லை. மேக்கேதாட்டு அணை திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கர்நாடக அரசுக்கு தேவையில்லை. நமது திட்டம் சட்டப்படியானதாகும்.
எனவே, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற நமது வழக்குரைஞர்கள் வாதிட வேண்டும். ஒருவேளை மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தால், அது கர்நாடகத்துக்கு பின்னடைவாக அமையும்.
அந்த சூழ்நிலை உருவாகாமல் தடுக்க வழக்குரைஞர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு இந்த விவகாரத்துக்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதை உச்ச நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றார்.