முகப்பு
பெங்களூரு

எச்.டி.குமாரசாமியுடன் அமித்ஷா கலந்தாய்வு

மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமியுடன் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார்.

Updated On : 15 மே, 2018 at 2:51 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமியுடன் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட இருக்கின்றன. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை ஏற்படும் என்றும், அதிக இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும் தெரியவந்துள்ளது.
அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்காத நிலையில், காங்கிரஸை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும்பொருட்டு, மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சிஅமைப்பதற்கான வாய்ப்புகளை பாஜக ஆராய்ந்து வருகிறது. தேர்தல் முடிவு வெளியானதும் மஜத கிங்மேக்கராக பரிணமிக்கும் என்று எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த பல மாதங்களாக உடல்நிலையை பொருள்படுத்தாமல் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டிய மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி, தனது மகன் நிகில் கெளடாவுடன் ஓய்வெடுப்பதற்காக சிங்கப்பூர் சென்றிருக்கிறார்.
இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள குமாரசாமியுடன் திங்கள்கிழமை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தொலைபேசி மூலமாக தேர்தல் முடிவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார் என்பது நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பாஜக அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும். ஒருவேளை பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இருகட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்று கருத்தை குமாரசாமியிடம் அமித்ஷா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது அரசியல் கட்சிகளிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.