முகப்பு
பெங்களூரு

3 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை விரும்பாத அரசியல் கட்சிகள்!

கர்நாடகத்தில் சிவமொக்கா,  பெல்லாரி,  மண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்

Updated On : 8 அக்டோபர் 2018, 8:25 am IST
பகிர்:

கர்நாடகத்தில் சிவமொக்கா,  பெல்லாரி,  மண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3-இல் நடத்தப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு அரசியல் கட்சிகளிடையே வரவேற்பை பெறவில்லை. 
சிவமொக்கா தொகுதி எம்பியாக இருந்த பாஜகவின் எடியூரப்பா, பெல்லாரி தொகுதி எம்பியாக இருந்த பாஜகவின் ஸ்ரீராமுலு,  மண்டியா தொகுதி எம்பியாக இருந்த மஜதவின் சி.எஸ்.புட்டராஜூ ஆகியோர் கர்நாடகத்தில் நிகழாண்டின் மே மாதத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 
இதைத் தொடர்ந்து, 3 பேரும் தங்களது எம்பி பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டனர். இதனால் காலியான 3 தொகுதிகளுக்குதான் நவம்பர் 3-இல் இடைத்தேர்தலை நடத்தப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
அடுத்த ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நடக்கிறது.  இந்த நிலையில்,  எம்பிக்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவோர் 7 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும் என்பதால், இடைத்தேர்தலை அரசியல் கட்சிகள் விரும்பவில்லை. 
"தேவையில்லைதான்-போட்டியிடுவோம்': "3 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று நினைத்திருந்தோம். ஆனால் இடைத்தேர்தல் நடத்தப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், அதை எதிர்கொள்ள தயாராகப் போகிறோம்' என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதேபோல்,  "அடுத்த 7 மாதங்களுக்கு மட்டுமே எம்பியாக இருக்க வாய்ப்புள்ள தொகுதிகளுக்கு எதற்காக தேர்தல் நடத்த வேண்டும்' என்று கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டுராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவரும்,  கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா கூறுகையில், "3 மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தேவையில்லாத வேலையாகும். இங்கு வெற்றிபெறுவோர் மிக குறுகிய காலத்துக்கே பதவி வகிக்க இருக்கிறார்கள். இதற்காக எதற்கு தேர்தல் நடத்த வேண்டும். 
தேர்தல் ஆணையத்தின் முடிவு சரியானதல்ல' என்று தெரிவித்திருக்கிறார்.
இதேபோல், மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெகெளடாவும் இதே கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
திடீர் அறிவிப்பால் அரசியல் கட்சிகள் அவசர ஆலோசனை: மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்பதால் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் எந்தவித முன்னேற்பாடுகளிலும் ஈடுபடாமல் இருந்தன. இந்த நிலையில், நவ.3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருப்பதால், வேட்பாளர் தேர்வு, பிரசார திட்டம் உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சிகள் யோசிக்கத் தொடங்கியுள்ளன. 
சிவமொக்கா மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.  இதில்,  பங்கேற்ற பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பா,  தனது மகன் பி.ஒய்.ராகவேந்திராவை களமிறக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்ட தொடங்கியுள்ளன.
காங்கிரஸ்-மஜத கூட்டணியாகப் போட்டி?
3 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து காங்கிரஸ், மஜத ஆகியகட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளன. 
இந்நிலையில், மண்டியா தொகுதியில் மஜத போட்டியிடுவார் என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகெளடா அறிவித்துள்ளார்.  
அங்கு தனது பேரனும்,  முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில்கெளடாவை களமிறக்க தேவெகெளடா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.   ஆனால் மண்டியா தொகுதியை மஜதவுக்கு விட்டுத் தர அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்பவில்லை.  இதுதொடர்பாக கட்சித்தலைவர்களை திங்கள்கிழமை சந்தித்து முறையிட மண்டியா மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவுசெய்துள்ளனர்.
மண்டியா தொகுதியில் மஜதவும்,  சிவமொக்கா, பெல்லாரி தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.  
இதன்காரணமாக மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.