அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!
அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதைப் பற்றி...
அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாகவும், திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆளுங்கட்சியான திமுக எதிர்க்கட்சியான நிலையில், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி.வேலுமணி - சிவி சண்முகம் அணி என இரண்டாக உடைந்தது.
Advertisement
Advertisement
தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராகப் பதவியேற்றார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், தவெகவினர் தவிர்த்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏக்கள் 22 பேர் தவெகவை எதிர்த்தும், சி.வி. சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் தனியே பிரிந்து, 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கொறடா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை, வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் நேற்று (மே 25) சந்தித்துப் பேசியிருந்தனர்.
எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் நேற்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகரை சந்தித்து ராஜிநாமா கடிதம் அளித்தனர்.
இந்த நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ-வான இசக்கி சுப்பையா, சட்டப்பேரவையில் அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
அப்போது அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் கேட்டுக்கொண்டதன் பேரில், ராஜிநாமா கடிதத்தை இசக்கி சுப்பையாவிடம் கைப்பட எழுதிகொடுத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இசக்கி சுப்பையா வெற்றி பெற்றிருந்தார்.
2011 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுப்பையா, 2026 தேர்தலிலும் அ.தி.மு.க சார்பாக அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையா, ஒரு மாதத்திலேயே அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.