இசக்கி சுப்பையா ராஜிநாமா ஏற்பு! தவெகவில் இணைந்தார்!
தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா குறித்து...
அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், அவரது ராஜிநாமாவை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரைச் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை இசக்கி சுப்பையா வழங்கியிருந்த நிலையில், அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில், இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார்.
Advertisement
Advertisement
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் காரணமாக அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஓர் அணியாகவும், தலைமை நிலையச் செயலரும், எம்எல்ஏவுமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஓர் அணியாகவும் அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்தனர். தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தபோதும், அமைச்சரவை விரிவாக்கத்தில் எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், வேலுமணி தரப்பினர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ். பி.வேலுமணி தரப்புக்கு இடையே சமாதானப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக எஸ்.பி. வேலுமணி அணியில் செயல்பட்டு வந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயகுமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரை திங்கள்கிழமை நேரில் சந்தித்து தங்களது ராஜிநாமா கடிதத்தை வழங்கினர். தொடர்ந்து, அவர்கள் மூவரும் தலைமைச் செயலகத்தில் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அா்ஜுனாவை நேரில் சந்தித்து தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் இன்று (மே 26) தவெகவில் இணைந்தார்.