மைசூரு அரண்மனையில் இன்று விஜயதசமி கொண்டாட்டம்
மைசூரு அரண்மனையில் விஜயதசமி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது.
மைசூரு அரண்மனையில் விஜயதசமி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது.
கர்நாடக மாநிலத்துக்குள்பட்ட மைசூரில் விஜயதசமி நாளன்று அரசு சார்பிலும், அரண்மனை சார்பிலும் தசரா விழாவை கொண்டாடுவது வழக்கம்.
ஆனால், கடந்த அக்டோபர் 19-இல் விஜயதசமியன்று தசரா விழா கொண்டாட்டத்தின்போது, அரச குடும்பத்தின் மகாராணி பிரமோதாதேவியின் தாயார் புட்டசின்னமணியும், ஸ்ரீகண்டதத்த உடையாரின் சகோதரியான விஷாலாக்ஷிதேவி ஆகியோர் உடல்நலம் குன்றி, தனியார் மருத்துவமனைகளில் இறந்தனர்.
இதனையடுத்து அரண்மனையில் தீட்டு ஏற்பட்டதால், விஜயதசமியன்று நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் அரண்மனையைச் சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அரண்மனையிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து, மைசூரு அரண்மனையில் விஜயதசமி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது.
இதன்படி, தங்கப் பல்லக்கில் பட்டத்து கத்தியையும், வெள்ளிப் பல்லக்கில் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாரும் அமர்ந்தவாறு, சாமுண்டீஸ்வரிக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். பின்னர், அவர் அரண்மனைக்கு விஜய யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.
கடந்த 400 ஆண்டுகளாக விஜயதசமியன்று தொடர்ந்து கடைப்பிடித்து வந்த இந்தச் சம்பிரதாயம், நிகழாண்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டதால் கைவிடப்பட்டது.
1610-ஆம் ஆண்டில் அரசரின் புதல்வர் இறந்ததால், அரச குடும்பத்தினரால் விஜயதசமி கொண்டாடப்படவில்லை. இதைத் தொடர்ந்து, நிகழாண்டு விஜயதசமியை அரச குடும்பத்தினர் கொண்டாடவில்லை என்று பட்டத்து இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தெரிவித்தார்.
அரச குடும்பத்தினர் விஜயதசமியைக் கொண்டாடுவதால், திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 வரை அரண்மனைக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அதன் பின்னரே பொதுமக்கள் அரண்மனைக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் அரண்மனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.