சிலிண்டர் ஜிஎஸ்டி வரியை 5%-ஆக குறைக்க ஹோட்டல் சங்கம் கோரிக்கை
வணிக சிலிண்டர் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதமாகக் குறைக்க கர்நாடக ஹோட்டல் சங்கம் கோரிக்கை
வணிக சிலிண்டர் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதமாகக் குறைக்க கர்நாடக ஹோட்டல் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட உயர்வைத் தொடர்ந்து, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை (மே.1) ரூ. 993 உயர்ந்து ரூ. 3,237-க்கு விற்பனையாகிறது. ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால், உணவுப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வணிக சிலிண்டர்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்குமாறு மத்திய அரசுக்கு கர்நாடக ஹோட்டல் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
இதுகுறித்து, ஹோட்டல் சங்கத்தின் தலைவர் ஜி.கே. ஷெட்டி பேசியதாவது, "உடனடி திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், அதிகரிக்கும் செலவுகளை நுகர்வோர் மீது செலுத்தப்படுவதைத் தவிர, வணிகங்களுக்கு வேறு வழியில்லை.
இதனால், வெளியில் சாப்பிடுவது என்பது மிகவும் விலை உயர்ந்ததாக மக்கள் எண்ணுகின்றனர். இது விநியோகச் சங்கிலிகளை கடுமையாக பாதித்துள்ளது.
எல்பிஜி பற்றாக்குறையும் உயர்வும், மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான செயல்பாட்டு செலவுகளை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு, பணவீக்க அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தும்.
இத்தகைய சவாலான காலங்களில், இந்தத் துறையை ஆதரிப்பது அதன் உயிர்வாழ்வையும் நீண்ட கால நிலைத்தன்மையையும் உறுதி செய்வது அவசியம்" என்று தெரிவித்தார்.