கடனில் ஆட்டோ வாங்கி, மாதத் தவணை செலுத்தாத ஆட்டோக்களை திருடி வாடகை விட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு ராமசந்திரபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல்கான். இவருக்கு சொந்தமான ஆட்டோ கடந்த ஆண்டு நவ. 7-ஆம் தேதி திருடு போனது. இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீராமபுரம் போலீஸார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, பனசங்கரியைச் சேர்ந்த ராஜு (38), பசவேஸ்வரநகரைச் சேர்ந்த ஹேமந்த்குமார் (28) ஆகியோரைக் கைது செய்தனர்.
விசாரணையில் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த இவர்கள் இருவரும், தங்களிடம் கடன் பெற்று ஆட்டோ வாங்கியவர்கள் மாதத்தவணை செலுத்தாதவர்களை அடையாளம் கண்டு, அவர்களது ஆட்டோவை திருடி வந்து, வேறு நபர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இதுதொடர்பாக நிதி நிறுவன உரிமையாளர் ரமேஷ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.