கோலார் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட14 பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.
பால், பட்டு, தங்கம் ஆகியவற்றுக்கு புகழ் பெற்ற கோலார் மக்களவைத் தொகுதியில், கோலார், மாலூர்,
முல்பாகல், சிந்தாமணி, தங்கவயல், பங்காரு பேட்டை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மொத்தம் 16 லட்சத்து 29 ஆயிரத்து 83 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 16 ஆயிரத்து 600 பேரும், பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 12 ஆயிரத்து 316 பேர்களும், 156 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர். தொகுதி முழுவதும் 2100 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 96 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என்றும், 98 சாவடிகள் மிக பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன.
மொத்தம் 7,480 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்துள்ளனர். பாதுகாப்பு பணியில் ஆயுதப் படை போலீஸார், ஊர்க்காவல் படை மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
வாக்குச் சாவடிகளில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கோலார் தங்கவயல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்ரெட்டி எச்சரித்துள்ளார். வாக்குப் பதிவின்போது தொகுதியின் எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் உள்ளே வரும் வாகனங்கள், வெளியேறும் வாகனங்கள் சோதனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கோலார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எச்.முனியப்பா, பாஜக வேட்பாளர் எஸ்.முனிசாமி, பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ஜெயபிரகாஷ், சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 14 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.