நவீன தொழில்நுட்பங்களால் மருத்துவத் துறை மேம்பாடு அடைந்துள்ளதாக அப்பல்லோ மருத்துவமனையின் எலும்பு சிகிச்சை வல்லுநர் வாசுதேவ் பிரபு தெரிவித்தார்.
பெங்களூரு வியாழக்கிழமை அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடைபெற்ற முதியோர்களுக்கான மருத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது:
80 வயதை கடந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளது. என்றாலும், அண்மைக் காலமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்களால் மருத்துவத் துறை மேம்பாடு அடைந்துள்ளது. இதன்மூலம் முதியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் எளிதாகியுள்ளது.
அண்மையில் 98 வயதை கடந்த லட்சுமியம்மா என்ற மூதாட்டிக்கு இடுப்பில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளித்தோம். அவர் தற்போது தனியாக நடக்கும் அளவிற்கு தேறியுள்ளார். எந்த வயதிலும் முதியவர்கள் சிகிச்சைப் பெறத் தேவையான தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, எலும்பு பிரச்னைகளுக்காக முதியவர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை
என்றார்.