இளைஞர்கள் தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் ஜி.டி.தேவெகெளடா தெரிவித்தார்.
பெங்களூரு மகாராணி அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுயவேலை வாய்ப்புக்கு தேவையான கல்வி என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசியது:
மாநில அளவில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதேபோல இளைஞர்களும் தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பயில வேண்டும். இனி வரும் காலங்களில் தொழில் கல்விக்கு எதிர்க்காலம் உள்ளது என்பதனை அனைவரும் உணர
வேண்டும்.
அரசு பல்கலைக்கழங்கள், எந்த தனியார் பல்கலைக்கழங்களை விடவும் தரம்குறைவானதாக இல்லை. என்றாலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்கள் அரசு பல்கலைக்கழகங்கள் வந்து வகுப்புகள் எடுக்க வேண்டும். ஆனால், எந்த அரசு பல்கலைக்கழகங்களிலும் இது போன்ற வகுப்புகள் எடுக்காதது வருத்தமளிக்கிறது. சர்வதேச அளவில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தும் முறை குறித்து இங்குள்ள பேராசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் ஆர்.எம்.ரங்கநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.