பொது இடங்களில் புகைபிடித்தவர்களிடம் அபராதமாக ரூ.45 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும், 228 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சி.அனிதா செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூரு மாவட்டத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் இதுவரை பொது இடங்களில் விதிகளை மீறி புகைப்பது தொடர்பாக 228 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ. 45,600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் விதிகளை மீறி புகைப்பிடிப்போரிடம் வசூலிக்கப்படும் அபராதமான ரூ. 200-ஐ உயர்த்தி ரூ.1,000 வரை வசூலிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் புகைபிடிப்போர் குறித்து புகார் அளிக்க, விரைவில் செல்லிடப்பேசி செயலி தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.