கர்நாடகத்தில் சித்தராமையாவை மீண்டும் முதல்வராக்கினால் வரவேற்பேன் என்று காங்கிரஸ் எம்எல்ஏ கே.சுதாகர் தெரிவித்தார்.
கோலாரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மஜதவுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்கவும், குமாரசாமியை முதல்வராக்கவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் முடிவுசெய்தனர்.
இதற்கு கட்டுப்பட்டு மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தோம். முதல்வர் குமாரசாமியின் தலைமையில் கூட்டணி அரசு வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுவருகிறது.
சித்தராமையாவை மீண்டும் முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் முடிவுசெய்தால், அதை வரவேற்பேன். சித்தராமையா முதல்வராவது காங்கிரஸுக்கு நல்லது.
காங்கிரஸிலேயே நீடிப்பேன்
பாஜகவில் சேருமாறு அந்த க்கட்சியின் முன்னணித்தலைவர்கள் என்னை அணுகியுள்ளனர். ஆனால், அதற்கு நான் மறுத்துவந்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சியிலே நீடிப்பேன். வாரியம் அல்லது கழகத்தலைவர் நியமனத்தில் நல்ல பதவி கிடைக்கக்கூடாது என்று சிலர் வேலை செய்தனர். எனினும், எதிர்காலத்தில் நல்ல பதவிகிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கூட்டுறவுத் தேர்தலில், கோலார் பால் உற்பத்தியாளர் ஒன்றிய நிறுவன இயக்குநராக கே.வி.நாகராஜ் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பேன் என்றார் அவர்.