பெங்களூரில் இலவச குழாய் பழுதுநீக்கும் பயிற்சியில் சேர விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹோப் அறக்கட்டளை மற்றும் ஆசீர்வாத் பிளம்பிங் பள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு கிருஷ்ணராஜபுரத்தில் எல்எம்எஸ் வணிக வளாகத்தில் அமைந்துள்ளது ஆசீர்வாத் பிளம்பிங் பள்ளி. இப்பள்ளியில் 3 மாதகால குழாய் பழுதுநீக்கும் பயிற்சி நடக்கவிருக்கிறது. இந்திய பிளம்பிங் ஸ்கில்ஸ் கவுன்சில் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இப்பயிற்சியில் சேர விரும்புவோருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
3 மாதமும் தங்கியிருந்து படிக்க உணவு, உறைவிடமும் இலவசமாக வழங்கப்படுகிறது. 3 மாதகால பயிற்சியின் நிறைவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது. இந்த பயிற்சியில் சேரவிரும்புவோர் 10-ஆம் வகுப்பு, பியூசி, பட்டயம், பட்டப்படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருக்கலாம்.
18 முதல் 30 வயதுக்குள்பட்டவராக இருப்பது அவசியமாகும். பயிற்சியில் சேர ஆர்வமுள்ளோர் ஆதார் அட்டை, உடல் தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பயிற்சியில் நவீன குழாய் பழுதுபார்க்கும் தொழில்நுட்பம் கற்றுத்தரப்படுகிறது.
எனவே, பயிற்சிக்கு பிறகு இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வேலைசெய்யும் வாய்ப்பு ஏற்படும். மேலும் விவரங்களுக்கு 9535101826, 9663600169, 9060719344, 9686598977 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.