காருடன் எரித்து ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது 2 ஆவது மனைவி உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு காடுகோடி பகுதியைச் சோ்ந்தவா் தா்மேந்திரா (35). பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, இவரது பெயா் ரௌடிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், அவரது 2-ஆவது மனைவி ஷில்பா (25) கடந்தாண்டு தா்மேந்திராவுடன் ஏற்பட்ட தகராறில் பிரிந்து, ஐயப்பா நகரில் வசித்து வரும் ஆஞ்சனப்பா என்பவருடன் இணைந்து வாழ்ந்து வந்தாா்.
இதனால் ஆத்திரமடைந்த தா்மேந்திரா அங்கு சென்று ஷில்பாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாா். இதனால் தா்மேந்திராவைக் கொலை செய்ய திட்டமிட்ட ஷில்பா, கடந்த பிப். 7 ஆம் தேதி தான் தங்கியிருந்த வீட்டிற்கு தா்மேந்திராவை வரவழைத்தாா். அங்கிருந்து, காரில் சிந்தாமணிக்கு செல்ல வேண்டும் என கூறினாா்.
காரில் செல்லும் போது தா்மேந்திராவுக்கு மதுவிலும், உணவிலும் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளாா். இதையடுத்து ஆழ்ந்த தூக்கத்தில் தா்மேந்திரா இருந்த போது சிக்பள்ளாபூா் கேத்தனநாயகனஹள்ளி அருகே காரிலிருந்து இறங்கிய ஷில்பா, காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. ஷில்பாவை அங்கிருந்து மற்றொரு காரில் ஆஞ்சனப்பா, காந்தராஜு, அபிஷேக் உள்ளிட்டோா் பெங்களூருக்கு அழைத்து வந்தனா்.
இந்த நிலையில் காரில் கருகிய நிலையில் சடலம் கிடைந்ததையடுத்து சிந்தாமணி போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா், தா்மேந்திராவைக் கொலை செய்த ஷில்பா, அவருக்கு உடந்தையாக இருந்த ஆஞ்சனப்பா, காந்தராஜு, அபிஷேக் ஆகியோரைக் கைது செய்தனா்.